ஆஷாட நவராத்திரி

By
கலாவாணிதாசன்
SRK IYER

ஆஷாட நவராத்திரி ஆஷாட மாதம் ஆரம்பிக்கும்பொழுது துவங்குகின்றது. அதாவது சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக வைத்து துவங்கும் மாதமான ஆஷாட மாதத்தின் முதல்நாளில் இந்த நவராத்திரி துவங்குகின்றது. இன்னும் சொல்லப்போனால் ஆனி மாத அமாவாசைக்கு மறுநாளிலிருந்து இந்த நவராத்திரி ஆரம்பிக்கின்றது.
இந்த நவராத்திரியை வாராஹி நவராத்திரி அன்று அழைப்பர்.
எங்கும் நிறைந்த மகாசக்தியாம் அந்த பராசக்தியின் ஒரு அம்சமாக விளங்கும் அன்னை வாராஹி அம்மனை வழிபடும் முகமாக இந்த நவராத்திரி அமைந்துள்ளது.
வாராஹி அன்னையின் கையில் ஏர் கலப்பை உள்ளது.
இந்த வாராஹி தேவதை பூமி மற்றும் அந்த பூமியிலிருந்து விளையும் கிழங்கு மற்றும் பயிர் வகைகளை குறிக்கும் தேவதை என்பதை உணர்த்திட அன்னை வாராஹியின் கையில் ஏர் கலப்பை உள்ளது என்று மகான்கள் கூறியுள்ளார்கள்.
அதாவது இந்த மாதத்திலிருந்து வான் மழை வலம் வரும் காலம். வான் மழை பயிர்கள் செழிப்பாக வளர ஒரு முக்கிய காரணமாகும்.
இந்த ஆஷாட மாதம் என்று சொல்லப்படுகின்ற ஆடி மாதத்தில்தான் நெல் வயல்களை உழுது விதையிட்டு நாற்று நட்டு பயிர் விளைச்சலை ஆரம்பிப்பார்கள்.
இதன் பின்னர் பருவ மழை பொழிந்து பயிர்கள் விளைந்து அது அமோக விளைச்சலை தரும்.
அந்த மாதிரி பருவத்தே மழை வந்து பயிர்கள் செழிப்பாக வளர வேண்டும் என்று பிரார்த்திப்பதற்காகவே ஏர் கலப்பையை தன் கையில் ஏந்தியுள்ள அன்னை வாராஹி தேவியை இந்த ஆஷாட மாதத்தின் ஆரம்பத்தில் வழிபடும் ஒரு நிகழ்வை நமது முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
அதனால்தான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட தஞ்சை தரணியில் உள்ள பெரிய கோவிலில் அன்னை வாராஹி அம்மனுக்கு ஒரு சன்னதி அமைத்து நமது முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளார்கள் என்று நாம் இந்த இடத்தில் புரிந்து கொள்ளலாம்.
ஆகவே பூமித்தாயின் மடியில் பயிர் செல்வங்கள் மிளிர்ந்து மலர்ந்து செழித்து விளைய  பருவ மழை குறைவின்றி பொழிய அன்னை வாராஹி தேவியை இந்த ஆஷாட நவராத்திரியில் வழிபடுவோம்.
பயிர் வளம் கொழிக்க
பருவ மழை செழிக்க
மண் வளம் மலர்ந்து
விளைச்சல் செழிக்க
அன்னையே
வாராஹி தேவியே
பணிகிறோம் நின் திருப்பாதம்
அருள்வாய் அன்னையே


Comments

Popular posts from this blog