அஜபா யோகம்
By
கலாவாணிதாசன்
SRK IYER
உளவியல் ஆலோசகர்
யோகம் என்ற வடமொழி
சொல்லுக்கு இணைதல் அல்லது ஒன்று படுதல் என்று பொருள் கொள்ளப்படும்.
ஒன்றுபடுதல் என்று
சொன்னால் ஒரு பொருளையோ அல்லது ஒரு ஒலியையோ
நினைத்து அந்த எண்ணத்துடன் இணைதல் என்று நாம் பொருள் கொள்ளலாம்.
அஜபா என்றால் ஜபமற்றது
என்று பொருள். ஜபம் அல்லது தியானம் என்றால் ஒரு பொருளையோ அல்லது ஒரு மந்திரத்திலோ நாம்
மிகவும் ஆழ்ந்து அந்த பொருளிலோ அல்லது ஒலியிலோ நம்மை நாமே ஒன்றுபடுத்திக் கொள்ளுதல்
ஜபம் எனப்படும்.
ஜபமில்லாதது என்றால்
எப்படி? ஏதேனும் ஒரு பொருளில்தானே மனம் செல்ல முடியும். அப்படி மனம் செல்லும்பொழுதுதானே
அது ஜபமாக முடியும். அப்படி இல்லாமல் ஜபமற்றது என்றால் என்ன?
ஜபமற்றது என்றால்
சதா சர்வ காலமும் ஜபத்திலேயே இருப்பதினால் அது இல்லாதது ஆகிறது என்று நாம் புரிந்து
கொள்ளலாம். அதாவது ஜபம் இடைவிடாது நடை பெறுகிறது என்று புரிந்து கொண்டால் அதுவே அஜபை
ஆகிறது என்று புரிந்து கொள்லலாம்.
எனது பூஜ்ய ஸ்ரீ
பரமேஷ்டி குருநாதர் அவர்கள் எழுதிய “அஜபா கல்பம்” என்கிற புத்தகத்தின் முன்னுரையில்
அஜபா என்றால் என்ன என்று விளக்கம் தந்துள்ளார். அதாவது குரு முகமாய் உபதேசிக்கப்பட்ட
ஓரெழுத்து சொல்லான பீஜ மந்தரமோ அல்லது பல எழுத்துகள்
கொண்ட மந்த்ரமோ இல்லாமல் இயற்கையாக சுவாச நடையின்
மூலம் உணரப்படும் ஒருவகை மந்திரத்திற்கு அஜபை என்று பெயர் என்று மேலே சொல்லப்பட்ட அஜபா
கல்பம் என்னும் புத்தகத்தில் விளக்கம் தந்துள்ளார்.
மற்ற ஜபத்தில்
கூறப்படும் மந்திரங்கள் எழுத்து வடிவமாகும். எழுத்து வடிவமாக உள்ள மந்திர ஒலியால் ஜபிக்கப்படுவது
ஜபம் எனப்படும். பீஜ மந்திரங்கள், மந்திரங்கள் இந்த வகையில் அடங்கும் என்று நாம் புரிந்து
கொள்ளலாம்.
ஆனால், மந்திர
ஒலி இல்லாமல் பிராணன் மற்றும் அபானன் என்ற வாயுக்கள் சஞ்சரிக்கும் இயற்கை நிகழ்ச்சியை
ஜபிக்காமல் உணரப்படுவதுதான் அஜபை எனப்படும். எப்பொழுதும் நமது உடலில் ஓடும் பிராண வாயுவின்
ஓட்டத்தினை உணருவதுதான் அஜபை என்று சொல்லப்படுவது. இதையே சித்தர்கள் வாசியோகம் என்று அழைக்கிறார்கள்.
நாம் சுவாசிக்கும் பொழுது வெளியில் வருகின்ற
சுவாசம் “ஹம்” என்றும் ஒலி
அலையையும் உள்ளே செல்லும்
பொழுது “ஸ:” என்ற ஒலி
அலைகளை யும் உண்டாக்குகிறது. இந்த
இரண்டு ஒலிகளும் சேர்ந்த “ஹம்ஸ:” என்ற
ஒலியே அஜபை எனப்படும்.
ஒரு நாளில் மனிதன்
21600 முறை சுவாசிக்கிறான். இங்ஙனம் ஏற்படும் சுவாச நடையினால் ஒரு மனிதன் ஒரு நாளில்
21600 முறை அஜபையை ஜபித்தவனாகிறான்.
இவ்விதம் நடைபெறும்
சுவாச நடையினை நமது உடலில் உள்ள ஏழு ஆதார சக்கரங்களில்
உள்ள தேவதைகளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
அதாவது முதல் நாள்
நடைபெற்ற 21600 மூச்சு நடைகளை பின் வருமாறு நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் உள்ள
தேவதைகளுக்கு நிவேதனம் செய்து விடவேண்டும்
சூரிய உதயம் முதல்
அதாவது காலை 6 மணி முதல் 6-40 வரை நடக்கும் 600 மூச்சுகளை நமது மூலாதர சக்கரத்தில் உள்ள ஸ்ரீ கணபதியை திருப்திபடுத்துவதாக நாம் உருவகப்படுத்தி
அவருக்கு அர்ப்பணித்து விடவேண்டும். இந்த காலை
6 மணி முதல் 6-40 வரை உள்ள காலத்தை கணபதி காலம் என்று கூறுவர்.
(குறிப்பு: காலை
6 மணி என்பது கணக்கிடும் வசதிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. சூரிய உதயம் முதல் 40
நிமிடம் வரை என்றுதான் கொள்ளவேண்டும். சில நேரங்களில் சூரிய உதயம் காலை 5.30 மணி அளவிலும்
குளிர் காலங்களில் சூரிய உதயம் காலை 6 மணிக்கு மேலும் அமையும். அந்த காலங்களில் அதற்குத் தக்கவாறு நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். கணக்கஇடும்
வசதிக்காக பொதுவாக சுமார் காலை 6 மணி என்று எடுத்துக்கொள்ளப்பட்டது.)
பிறகு காலை
6-41 முதல் பகல் 1-20 வரை நடைபெறும் 6000 மூச்சு நடைகள் ஸ்வாதிஷ்டானம் என்னும் சக்கரத்தில்
உள்ள ஸ்ரீ பிரம்மாவை திருப்திப் படுத்துவதாக உணர்ந்து அவருக்கு அர்ப்பணித்து விடவேண்டும்..
அதற்கு மேல் பகல்
1-20 முதல் இரவு 8 மணி வரையில் 6000 மூச்சு நடைகள் மணிபூரக சக்கரத்தில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கு அர்ப்பணித்து விட வேண்டும்.
இரவு 8 மணி முதல்
நள்ளிரவு 2-40 வர நடைபெறும் 6000 மூச்சு நடைகள் அனாஹத சக்கரத்தில் உள்ள ஸ்ரீ ருத்ரருக்கு அர்ப்பணித்து விடவேண்டும்.
பின்னிரவு
2-41 முதல் 3-46 வரை நடைபெறும் 1000 மூச்சு நடைகள் விசுத்தி சக்கரத்தில் உள்ள ஸ்ரீ
மஹேஸ்வரருக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.
காலை 3-46 முதல் 4-53 வரை நடை பெறும் 1000 மூச்சு நடை ஆக்ஞை சக்கரத்தில் உள்ள ஸ்ரீ ஈஸ்வரருக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.
இதற்கு மேல் காலை
4-53 முதல் 6 மணி வரை நடைபெறும் 1000 மூச்சு நடைகள் ஸ்ரீ சஹஸ்ரார சக்கரத்தில் உள்ள
ஸ்ரீ குருவினை போற்றி ஆராதித்து அவருக்கு நிவேதனம்
செய்து விட வேண்டும். பிரும்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் இந்த வேளை மிகவும் முக்கியமானதாகும்.
ஒவ்வொரு ஸ்ரீவித்யா உபாசகனும் இந்த வேளையில் எழுந்து ஸ்ரீ குருவினை தியானிக்க வேண்டிய
நேரமாகும் இது.
இவ்வாறாக ஒரு நாளில்
21600 முறை மூச்சு நடை நடந்து அஜபை என்னும் தியானம் நாள்தோறும் நடை பெறுகின்றது.
அதாவது முதல் நாள் நடைபெற்ற 21600 மூச்சு நடைகளை மேலே சொல்லப்பட்ட கிரமத்தில் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ பிரும்மா, ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீ ருத்ரர், ஸ்ரீ மஹேஸ்வரன், ஸ்ரீ ஈஸ்வரன், ஸ்ரீ குரு ஆகியவர்களுக்கு அர்ப்பணம் செய்வதாக சங்கல்பம் செய்துகொண்டு அந்த மூச்சு நடைகளை அந்தந்த சக்கரங்களில் உள்ள தேவதைகளுக்கு நிவேதனம் செய்வதாக உருவகப் படுத்திக் கொள்ளவேண்டும்.
நாமும் நாள்தோறும்
இந்த அஜபா யோகத்தினை பயிலுவோம். மூச்சு உள்ளே
செல்லும்பொழுது “ஸோ” என்ற ஒலியுடன் உள்ளே செல்வதாகவும்
மூச்சு வெளியே வரும்பொழுது “ஹம்” என்ற ஒலியுடன் வெளிவருவதாகவும் தியானிப்போம்.
இந்த “ஸோஹம்” என்கிற
ஒலியிலே உள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி விட்டால் “ௐம்” என்று ஒலிப்பதை நாம் உணர முடியும்.
இந்த அஜபா யோகம்
நம் ஸ்ரீ குருவின் திருவருளாலும் முன்வினைப் பயனாலும் மட்டுமே நமக்கு கிடைக்கும் என்பது
ஸ்ரீ குருவின் திருவாக்கு. இந்த அஜபா யோகத்தை
நாம் பாவனையாக உணர்ந்து கொள்ளவேண்டும். தினந்தோறும் பயிற்சி செய்ய வேண்டும். அங்ஙனம்
பயிற்சி செய்து உணருபவர்கள் பிரும்ம ஞானத்தை உணர்ந்து ஜீவன் முக்தர்களாக விளங்குவார்கள்
என்பது ஸ்ரீகுருவின் திருவாக்கு.
// ஸ்ரீ குருவின் திருவடிகளே போற்றி.//
Comments
Post a Comment